பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க.வினர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கண் தானம் செய்தனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றிலிருந்தும், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைப் பிரசனைகளிலிருந்தும் நம் நாட்டை கண் போல் பாதுகாத்து வரும் பாரதப் பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது 70-வதுபிறந்தநாளை முன்னிட்டும், கண் தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பா.ஜ.க. சார்பில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை கண் தானம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.டி.செந்தில்வேல் தலைமை வகித்தார். மருத்துவர் செல்லமேரி முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் த.பொன் ரவியிடம் கண்தானம் செய்வதற்கான விண்ணப்பத்தை பா.ஜ.க.வினர் 55 பேர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், நகர தலைவர்கள் பண்டாரம், ஆறுமுகம், முன்னாள் நகர தலைவர் செந்தில்குமார், நகர பொதுச்செயலர் வேல்குமார், மகளிரணி மாவட்ட தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் மேனகா, கிளைத் தலைவர்கள் குமாரவேல், கருப்பசாமி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கண் தானம் செய்தனர்.