பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் தனது சுட்டுரையில், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எங்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நம் தேசத்திற்கு சேவை செய்ய இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் இறைவன் அளிக்க வேண்டுமென்று நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சுட்டுரையில், “எங்கள் மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ.நரேந்திர மோடிஜிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். யாரும் எட்டமுடியாத உயரத்துக்கு நம் தேசத்தை அழைத்துச் செல்வதற்கான அவரது இலக்கில், அவருக்கு நல்ல ஆரோக்கியமும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.