சென்னை: நீதிமன்றம் குறித்து கருத்துக் கூறிய விவகாரத்தில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று அச்சத்தால், காணொலி வாயிலாக வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம், மாணவர்களை நீட் தேர்வு எழுதச் சொல்கிறது என்று நடிகர் சூர்யா கருத்துக் கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு எதிராக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முகாந்திரம் இருப்பதாகக் கூறி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையற்றது என்று கூறி ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆறு பேர் கடிதம் எழுதியிருந்தனர். இது குறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு, நீதிபதி சுப்ரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்து, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், விமரிசனங்களை முன்வைக்கும் போது இனி கவனமுடன் இருக்குமாறு சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.