திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் சரவண பொய்கையில் மீன்கள் இறந்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானது சரவணப்பொய்கை. இங்கு இருந்து தினமும் காலை புனித நீர் எடுத்து கோவில் கொடிமரத்தில் அபிஷேகம் செய்யப்படும். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் இடமாகவும் சரவணப்பொய்கை உள்ளது.
திருப்பரங்குன்றத்தில் இப்பகுதி மக்கள் சரவணப்பொய்கையில் துணிகளை துவைப்பது, ரசாயன கலவையான ஷாம்பு சோப்பு போட்டு குளிப்பதால் தண்ணீர் தொடர்ந்து அசுத்தம் ஆகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் செலவில் பொதுமக்களுக்கு துணிகள் துவைக்க புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவிலிருந்து சரவணப்பொய்கையில் உள்ள மீன்கள் இறந்து மிதக்கத் தொடங்கின. வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் ஆயிரக்கணக்கான மீன்கள் சரவணப்பொய்கையில் இறந்து மிதந்தன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் நிலவியது.
இதையடுத்து கோவில் நிர்வாகம் பொய்கையில் மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் கூறுகையில், மீன்கள் இறந்தது எப்படி என்று தெரியவில்லை. அதிக வெயில் காரணமாக இறந்தனவா அல்லது யாரேனும் மர்மநபர்கள் விஷம் ஏதாவது கலந்து விட்டார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
மேலும் சரவண பொய்கை தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ஏற்கனவே மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம் மூலம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பொய்கை நீரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலையில் தற்போது மீன்கள் இறந்தது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.