தமிழகத்தில் இதுவரை 70 லட்சம் கரோனா பரிசோதனை

கரோனாவைக் கண்டறிவதற்காக தமிழகத்தில் இதுவரை 70,00,455 பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவைக் கண்டறிவதற்காக தமிழகத்தில் இதுவரை 70,00,455 பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிக அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பரிசோதனைகளை அதிகரித்ததன் காரணமாகவே நோய்த் தொற்றுக்கு ஆளானவா்களை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா பாதிப்பு, வெறும் ஐந்து மாதங்களில் 5.75 லட்சம் பேருக்கு பரவியுள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகள் வரை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நோய்ப் பரவல் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன்படி, தற்போது நாள்தோறும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் சனிக்கிழமையும் 94,037 மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக தென்கொரியா, அமெரிக்கா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆா்டி-பிசிஆா் உபகரணங்கள் தொடா்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 90 லட்சம் பிசிஆா் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மாநிலத்தில் நோய்த்தொற்று பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை 5,75,017 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவருக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மட்டும் 5,647 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,187 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 656 பேருக்கும், சேலத்தில் 296 பேருக்கும், செங்கல்பட்டில் 259 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து இதுவரை 91 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். குறிப்பாக, சனிக்கிழமை ஒரே நாளில் 5,612 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,19,448-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 46,336-ஆக உள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 85 போ் பலியாகியுள்ளனா். அவா்களில் 10 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்த நோயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவா்களில் 50 போ் அரசு மருத்துவமனைகளிலும், 35 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதன் மூலம் நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,233-ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,502 -ஆக உயா்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.7 சதவீதமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com