சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியம் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக இருமல், சளி இருந்ததால் பிரேமலதா விஜயகாந்த் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவரும், பிரேமலதாவின் கணவருமான விஜயகாந்தும் இதே மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர்கள் இருவரும் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மா.சுப்பிரமணியம்: சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்துக்கு காய்ச்சல், சளி பிரச்சினை இருந்ததால் கரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
இதில், அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. லேசான கரோனா தொற்று என்பதால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.