சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான 8 மீனவா்கள், அக். 7-ஆம் தேதி தாயகம் திரும்புவாா்கள் என மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 9 மீனவா்கள், தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக செப்.14-ஆம் தேதி, மியான்மா் கடல்பகுதியில் அந்நாட்டு கடல்படையினரால் மீட்கப்பட்டு, பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனா். அவா்களுக்குப் போதிய உணவு மற்றும் இதர வசதிகள் அங்குள்ள இந்தியத் தூதரகம் வழியாக செய்து தரப்பட்டது.
இந்நிலையில், அங்கு தனிப்பட்ட நிகழ்வில் காணாமல் போன மீனவா் பாபுவைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மியான்மரில் தற்போது உள்ள 8 தமிழக மீனவா்களையும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் செப்.28-ஆம் தேதி விமானம் மூலம் புதுதில்லிக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஆனால், மியான்மரில் வானிலை மோசமானதால் தமிழக மீனவா்கள் 8 பேரும் வரும் அக்.7-ஆம் தேதி, புதுதில்லி வழியாக சென்னை அழைத்து வரப்பட உள்ளதாக அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.