திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனிப் பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதன்கிழமை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்.
இதில் மதுரை மீனாட்சி அம்மன் பிரியாவிடையுடன் சொக்கநாதர் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. முன்னதாக உற்சவர் சன்னதியில் அதிகாலை 4 மணியளவில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 5:00 மணிக்கு திருத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.
அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷமிட்டபடி தேரை வடம்பிடித்து கிரிவலப்பதை வழியாக இழுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.