சென்னை: கடைசி ஆயுதமாக வருமான வரித்துறையை பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் மற்றும் அண்ணாநகர் திமுக வேட்பாளரின் மகன் வீடு உள்பட தமிழகத்தில் இன்று திமுகவினருக்குச் சொந்தமான 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இது குறித்து கே.எஸ். அழகிரி வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கத்தின் இறுதியாக, கடைசி ஆயுதமாக வருமான வரித்துறையை பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது. தி.மு. கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன், அண்ணாநகர் தி.மு.க. வேட்பாளர் எம்.கே. மோகன், கரூர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
இதன்மூலம் தி.மு.க.வை முடக்கி விடலாம் என பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது. இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்கிற பேராண்மை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு இருக்கிறது என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தோடு நடத்தப்படுகிற வருமான வரித்துறை சோதனைகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.