திருச்சி: திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் பிரசாரத்தின்போது திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சோர்வு காரணமாக திடீரென மயங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளராக அக்கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், நடப்பு சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை காலை, திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வாக்காளர்களிடையே வாக்குகளைச் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவருடனிருந்த வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சோர்வு காரணமாக திடீரென மயங்கினார், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நலம் பெற்ற அவர் தனது இல்லம் திரும்பினார்.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதால், இவர் கடந்த ஒரு மாதமாகவே ஓய்வின்றி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டிருந்ததால் சோர்வடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.