தேர்தல் பிரசாரத்தின்போது அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுபற்றி ஏப்ரல் 7-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என உதயநிதிக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் பாஜக தலைவர்கள் குழு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.