வேலூர்: கோடை வெயில் காரணமாக வேலூரில் காலையிலேயே வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் திரண்டிருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே அதிகபட்சம் 110 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவின் போதே அதிகப்படியான வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் திரண்டிருந்தனர். அவர்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணமுடிந்தது. அதேசமயம், கரோனா தடுப்புக்காக வாக்குச்சாவடிகளில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன.
அவற்றை பின்பற்றுவதில் முதியவர்கள் சற்று சிரமம் அடைந்தனர். குறிப்பாக கைகளுக்கு உறை அணிந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கையுறைகளை அணிந்து கொள்வதில் முதியவர்கள் தடுமாற்றம் அடைந்தனர். உதவியாளர்கள் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோடை வெயில் காரணமாக பகல் 11 மணிக்கு மேல் கடுமையான வெப்பம் நிலவும். இதன் காரணமாகவே காலையிலேயே அதிகப்படியான வாக்காளர்கள் வாக்களிக்க வந்துள்ளனர். மேலும் கடந்த தேர்தலை காட்டிலும் இந்தத்தேர்தல் புதுமையானது.
புதியவர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்புகள் தொடங்குவதற்கான சூழலும் உள்ளது. அதனாலேயே மக்கள் அதிகளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கை முறையாக பின்பற்றப்படுவது வரவேற்கத்தக்கது. எனினும் முதியவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அது தவிர்க்க இயலாதது தான் என்றனர்.