தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவான ஐந்து தொகுதிகளில், முதல்வர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியும் ஒன்றாக உள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது.
தமிழகத்தின் அநேக வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். வெயில் சுட்டெரிக்கும் என்ற எண்ணத்தில், காலைவேளையிலேயே வாக்காளா்கள் அதிகளவு திரண்டு வந்து தங்களது வாக்குகளைச் செலுத்தினா். காலையில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்ததால், மொத்த வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. தமிழகப் பேரவைத் தேர்தலில் 72.78% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு
ஆனால், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 72.78 சதவீ வாக்குகள் பதிவானதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரப்பூர்வமாக இன்று தெரிவித்தாா்.
அவர் வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், அதற்கு அடுத்தபடியாக குளித்தலையில் 86.15 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
தமிழக முதல்வர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடியில் 85.60 சதவீத வாக்குகளும், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூரில் 60.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
தமிழகத்தில் அதிக வாக்குகள் பதிவான தொகுதிகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்கள்:
பாலக்கோடு - 87.332 சதவீதம்
குளித்தலை - 86.15 சதவீதம்
எடப்பாடி - 85.6 சதவீதம்
அரியலூர் - 84.58 சதவீதம்
கிருஷ்ணராயபுரம் - 84.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.