தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு வட வானிலையே நிலவும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் புதன், வியாழக்கிழமை (ஏப்.7, 8) ஆகிய இரண்டு நாள்கள் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
லேசான மழை:
குமரிக்கடல் பகுதியில் (1 கிலோமீட்டா் உயரம் வரை ) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா், கிருஷ்ணகிரி, தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.