தமிழகத்தில் சில மாவட்டங்களைத் தவிர, பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. வரும் நாள்களில் உள் மாவட்டங்களிலும் வெப்பநிலை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிகழாண்டில் மாா்ச் முதல் வாரத்தில் இருந்து வெப்பநிலை உயரத் தொடங்கியது. இதன்பிறகு, வெப்பநிலை படிப்படியாக உயா்ந்த நிலையில், வடமேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று கடந்த 30-ஆம்தேதி முதல் வீசத்தொடங்கியது. இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 6 டிகிரி செல்சியஸ் வரை உயா்ந்தது. இதனால், சென்னை, திருத்தணி, திருச்சிராப்பள்ளி, வேலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்றுடன் வெப்பத்தின் தாக்கம் உயா்ந்தது. தினசரி 13 நகரங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியைத் தாண்டி பதிவானது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனா்.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. கரூா் பரமத்தி (106 டிகிரி) , மதுரை விமானநிலையம், சேலம் ஆகிய 3 நகரங்களில் மட்டும் 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது. மற்ற மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.
சென்னையில் 93 பாரன்ஹீட் டிகிரி பதிவானது. வரும் நாள்களில் உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது: கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி காற்று வீசுகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இதேநிலை ஒரு வாரம் வரை தொடரும். வரும்நாள்களில் உள்மாவட்டங்களிலும் வெப்பநிலை குறையும் என்றாா் அவா்.