சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த திரை பிரபலங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த், காலையிலேயே ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தார். நடிகர் சிவகுமார், அவரது மூத்த மகன் சூர்யா, இளைய மகன் கார்த்தி ஆகியோருடன் வந்து தியாகராயநகர் ஹிந்தி பிரசார சபாவில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். நடிகர் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் பெசன்ட் நகர், மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தனர். இதில் விக்ரம் வாக்களிக்கச் சென்றபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் சுமார் 20 நிமிஷம் வரை காத்திருந்து அதன் பின்னர், அவர் வாக்களித்துச் சென்றார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், வடபழனியில் உள்ள கார்த்திகேயன் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்தார். நடிகர் சிவகார்த்திகேயன், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையத்தில் வாக்களித்தார். நடிகர் பிரபு, தனது மகன் விக்ரம் பிரபு மற்றும் சகோதரர் ராம்குமார் உள்ளிட்டோருடன் தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வளாக வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
நடிகர் விஜய்சேதுபதி, கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். இதே போல், நடிகர்கள் சத்யராஜ், அருண்விஜய், ஆர்யா, எஸ்.வி.சேகர், பாக்யராஜ், ஜெயம்ரவி, விஜயகுமார், பிரசன்னா, நாசர், அவரது மனைவி கமீலா நாசர், இயக்குநர் பாரதிராஜா, நடிகைகள் த்ரிஷா, சினேகா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், தேவயாணி, நமீதா உள்ளிட்ட பலரும் தங்களது ஜனநாயகக் கடமை ஆற்றினர்.