விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருநகரம் ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் 100ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 3ம் நாள் அன்னை வீதி உலா நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.
அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் உள்ள திருநகரம் புளியம்பட்டி ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலின் 100ம் ஆண்டு பங்குனித் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து வியாழக்கிழமை 3 ம் நாள் திருவிழாவையொட்டி அன்று காலை முதல் பிற்பகல் 3 மணி வரை மரச்சப்பரத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மண்டகப்படியை முன்னிட்டு நகரின் வடக்கு எல்லைப் பகுதிகளான புளியம்பட்டி சிறு நெசவாளர் குடியிருப்பில் உள்ள கெங்கை மாரியம்மன் கோவில் வரையும், இராமலிங்க நகர் குடியிருப்பில் உள்ள விநாயகர் கோவில் வரையும், மேலும் பழைய நெசவாளர் குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் திரண்டு அம்மனுக்கு பட்டுடைகள், மலர்மாலை, பூஜைப் பொருட்கள் ஆகியவற்றைப் படைத்து வழிபட்டனர். மேலும் அப்பகுதிகளில் அன்னதானமும் நடைபெற்றது.
பிற்பகல் 3 மணிக்குப் பின் வீதி உலா நிறைவடைந்து, மீண்டும் கோவிலுக்கு அம்மன(உற்சவர்) வருகை தந்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டனர்.