கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் நடைமுறை மீண்டும் தொடங்கியுள்ளது.
சென்னையில் நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்த போது, முன்களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்து வந்தனர். அறிகுறி இருப்பவர்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, அவர்களை காய்ச்சல் முகாம்களுக்கு அனுப்புவது உள்ளிட்டப் பணிகள் மூலம், கரோனா அறிகுறி இருப்பவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
எனவே, அதே நடைமுறையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது.