அவிநாசியில் போக்குவரத்து இடையூறாக நின்ற வாகனங்களுக்குப் பூட்டு

அவிநாசியில்  போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்கு, போக்குவரத்து காவல்துறையினர் வியாழக்கிழமை பூட்டுப் போட்டு, அபராதம் விதித்தனர்.
அவிநாசியில் போக்குவரத்து இடையூறாக நின்ற வாகனங்களுக்குப் பூட்டு
அவிநாசியில் போக்குவரத்து இடையூறாக நின்ற வாகனங்களுக்குப் பூட்டு

அவிநாசியில்  போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்கு, போக்குவரத்து காவல்துறையினர் வியாழக்கிழமை பூட்டுப் போட்டு, அபராதம் விதித்தனர்.

அவிநாசி நகர் பகுதிக்குள் உள்ள சேவூர் சாலையானது, கோபி, சத்தியமங்கலம், மைசூர் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இதனால், தனியார், அரசு பேருந்துகள், பனியன் நிறுவன வாகனங்கள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். 

மேலும் இச்சாலையில் நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அவிநாசி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நீதிமன்ற வளாகங்கள் உள்ளிட்டவை உள்ளது.  குறிப்பாக கிழக்கு ரத வீதி, சேவூர் சாலை, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, மங்கலம் சாலை உள்ளிட்ட  பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட திருமணமண்டபங்கள் உள்ளது. இதனால், நகரப் பகுதியான ரத வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கும், விசேஷ காலங்களில் திருமணமண்டபங்களுக்கு  வரும் இருசக்கரம், நான்கு சக்கர வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் வகையில், போக்குவரத்துக்கு இடையூறாகச் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். 

இதனால் அவிநாசி-கோவை சாலை நகரப்பகுதி உள்ளிட்டவற்றில் அடிக்கடி  போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதுடன், மழைக்காலத்திலும், இரவு நேரத்திலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட சென்று வர இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதற்கு உரியத் தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தலின் படி, திருமண மண்டபங்களுக்கு வரும் அனைத்து வாகனங்களை நிறுத்துவதற்குத் தனி இடத்தை தேர்வு செய்யும் முயற்சி மண்டப உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து காவல்துறையினரும் திருவிழா, விசேஷ காலங்களில் அவ்வப்போது, நகர்புறத்தில் வாகன நெருக்கடியைச் சீரமைத்து வருகின்றனர். இருப்பினும் வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையாலும், வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்படுவதாலும் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அவிநாசி நகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியுள்ள நான்கு, இருசக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அவிநாசி போலீஸார், வியாழக்கிழமை ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வந்தனர். 

இருப்பினும் கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகளில் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தியும் அப்புறப்படுத்தாத 3 கார்களில் சக்கரங்களுக்குப் பூட்டுப் போடப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு கார் ஓட்டுநர்களுக்கும் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இனி வரும் காலங்களில் இவ்வாறு போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்து காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து போலீஸார் இந்த நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com