சென்னை: கரோனா பரவலை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கரோனா தொற்று பரவல் இந்த ஆண்டின் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தான் அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும். ஒருபுறம் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி, மறுபுறம் கரோனா பாதுகாப்பு விதிகளை கடுமையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்துவது என்ற இரு முனை அணுகுமுறையை தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது.
தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பதன் மூலமாக மட்டுமே, கரோனா பரவல் வேகத்தை முழுமையாக குறைத்து நோயை முற்றிலுமாகப் போக்க முடியும்.
பொது இடங்களில் கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக மக்களுக்கு அரசு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பிறகும் முகக் கவசம் அணியாமல் வெளியில் வருபவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நடமாடுபவா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிப்பது, சிறை தண்டனை அளித்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.
இதேபோல், கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசனும் வலியுறுத்தியுள்ளாா்.