சென்னை: வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்ததற்காகத் தலைமை தோ்தல் அதிகாரியையும் தோ்தல் பணியில் ஈடுபட்ட ஊழியா்களையும் பாராட்டுகிறோம்.
அதேநேரத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை தலைமைத் தோ்தல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதி வரை அவற்றைப் பாதுகாப்பதிலும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்கள் தனிக்கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.