கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு உயர்நீதிமன்றம் தடை

பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கிரிஜா வைத்தியநாதன்
கிரிஜா வைத்தியநாதன்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அமைச்சரவையின் பணி நியமனக் குழு கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி, தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால், மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா உள்ளிட்ட 3 பேரை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்திருந்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டப்பிரிவின்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் இல்லை. அவர் 3 ஆண்டுகள் 6 மாத காலம் மட்டுமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். எனவே, அவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. இதனைக் கருத்தில் கொண்டு அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசு, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர்  பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும் சுற்றுச்சூழல் விவகாரங்களை கையாண்டது தொடர்பான அனுபவம் கிரிஜா வைத்தியநாதனுக்கு இல்லை, சட்டப்படி தேவைப்படும் தகுதியையும் அவர் பெற்றிருக்கவில்லை என கருத்து தெரிவித்தனர்.

பின்னர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதுதொடர்பாக
மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய பணியாளர் துறை கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கிரிஜா வைத்தியநாதன் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி பதவியேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com