மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சம்பள பிரச்னை காரணமாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 4 அலகுகளும், இரண்டாவதுபிரிவில் 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
இரண்டாவது பிரிவில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் 285 தொழிலாளர்கள் கடந்த 7 ஆண்டுகளாக மின் உற்பத்தி பிரிவில் பணிபுரிந்து வந்தனர். தற்போது அந்த ஒப்பந்தம் வேறு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் பழைய நிறுவனம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய உரிய சம்பளத்தை வழங்கவில்லை. குறைத்து சம்பளத்தை வழங்கியதால் தொழிலாளர்கள் சம்பளப் பணம் ரூ. 6.5 லட்சத்தை ஒரு பையில் போட்டு அனல் மின் நிலைய கொடிக்கம்பத்தில் வைத்துவிட்டனர். இதனை பாதுகாக்க அனல் மின் நிலைய நிர்வாகம் தரப்பில் பாதுகாவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இம்மாத சம்பளமும் சரிவர வழங்க நிர்வாகம் முன்வராத காரணத்தால் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.