முதல்வர் பழனிசாமியின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், தமிழ்ப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
“ஆதிமனிதன் தமிழன் தான்
அவன் மொழிந்ததும் செந்தமிழ்த்தேன்”
என்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கவிதைக்கேற்ப, தொன்மையும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ்மொழியை பேசும் உலகின் மூத்தகுடியான தமிழ்ப் பெருமக்கள் பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.
மலரும் இப்புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.