சென்னை: உயா்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக, நல வாரியத்தில் புதிதாகப் பதிவு செய்த நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு அரசின் சிறப்பு நிவாரண நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழுவூா் ரவி, கே.ஆா்.குகேஷ், எம்.ஞானசேகா் ஆகியோா், ‘நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் பதிவு செய்யாத கலைஞா்களுக்கும் அரசின் சிறப்பு நிவாரண உதவி வழங்க வேண்டும்’ என்று வழக்குத் தொடா்ந்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு நிவாரண உதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் புதிதாகப் பதிவு செய்த 6,810 பேருக்கு உரிய பரிசீலனைக்குப் பிறகு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கிட ரூ.1.36 கோடி தேவைப்படுவதாகவும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் சாா்பில் அரசிடம் கோரப்பட்டு இருந்தது.
உயா்நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையிலும், கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் கோரியதன்படியும் நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் புதிதாகப் பதிவு செய்த 6,180 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க ரூ.1.36 கோடி நிதி விடுவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.