தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, காங்கயம் பகுதியில் உள்ள கோயில்களில் புதன்கிழமை பக்தர்கள் அதிகளவில் வந்திருந்து, சாமி தரிசனம் செய்தனர்.
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலில் புதன்கிழமை 7 மணிக்கு சுவாமி புறப்பாடும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
இதில் அதிகாலை முதலே காங்கயம், திருப்பூர், படியூர், வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, காங்கயம் அடுத்துள்ள காடையூர் காடையீஸ்வரர் கோயில், மடவிளாகம் ஆருத்ரகபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோயில்கள், பாப்பினி பெரியநாயகி அம்மன் கோயில், அகிலாண்டபுரம் அகிலாண்டேஸ்வரர் கோயில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயில், காங்கயம் நகரம்-பழையகோட்டை சாலையில் உள்ள அகஸ்தீஸ்வரசாமி கோயில், பேட்டை மாரியம்மன் கோயில், பேருந்து நிலையம் அருகில் உள்ள துர்க்கையம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், புத்தாண்டில் நிறுவனங்கள் நடத்துவோர் வந்து புதுக் கணக்கு துவங்கினர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்த பின்னரே, கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோயில்களில் சானிடைசர் கொண்டு கைகளைக் கழுவுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.