நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ராஜு கூறியதாவது:
இன்று காலை 11 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக நடிகர் விவேக்கை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது இதயத்துடிப்பு குறைவாக இருந்தது. உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதயத்திற்குச் செல்லும் இடதுபுற ரத்தக்குழாயில் 100% அடைப்பு இருந்தது. ஆஞ்சியோ சிகிச்சை மூலமாக அது சரிசெய்யப்பட்டது.
பின்னர் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறார். 24 மணி நேரம் கண்காணித்த பிறகுதான் அவரது உடல்நிலை குறித்து கூற முடியும். நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 'மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் தானாக முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் உடல்நிலை முன்னேற வேண்டும் என்றுதான் அனைவரும் செயல்பட்டு வருகிறோம்.
தற்போது அவரது உடல்நிலை மோசமாகத் தான் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர் தடுப்பூசி போட்டதற்கும் மாரடைப்பு ஏற்பட்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவரது உடல்நிலை குறித்து நானே மன வருத்தத்தில் இருக்கிறேன்.
அவருக்கு பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை. மாரடைப்பு தவிர அவருக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இது ஒரு எதிர்பாராத நிகழ்வு' என்று தெரிவித்தார்.