கரோனா தடுப்பு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம்
பவானி: கரோனா இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகளின் கரோனா தடுப்பு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கேட்டுக் கொண்டார்.
ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த காடப்பநல்லூரைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம். இவர், தனது மனைவி சரஸ்வதியுடன் கடந்த மார்ச்.1-ம் தேதி முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில், 45 நாள்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து, அவர் கூறுகையில், இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். கரோனா பரவல் தடுப்பு விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார். மருத்துவ அலுவலர் திவாகர் அங்குராஜ், சுகாதார ஆய்வாளர் வள்ளிகுமார் உடனிருந்தனர்.
இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம். உடன், மனைவி சரஸ்வதி மற்றும் மருத்துவர் திவாகர் அங்குராஜ் உள்ளிட்டோர்.