விவேக் விரைவில் நலம் பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் இன்று காலை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக் கவலைக்கிடமான நிலையில் எக்மோ கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விவேக் விரைவில் நலம் பெற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், கரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.
அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.