கூத்தாநல்லூர், கம்பர் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்திலிருந்து ரூ.66 ஆயிரம் மதிப்புள்ள, 66 அரிசி மூட்டைகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செயலாளர் செல்வராஜ் கூறியது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் 1988ஆம் ஆண்டு, 33 ஆண்டுகளுக்கு முன்பு 100 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டன. தற்போது, 750க்கும் மேற்ட்ட உறுப்பினர்களுடன் வழிபாடு மன்றம் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் மாலையணிந்து, இருமுடி கட்டி, 14 பேருந்துகளில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்று வருகிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
தற்போது கரோனா தொற்று காலமாக இருப்பதால், ஒரு சிலர் மட்டுமே வருகிறார்கள். மேலும், செவ்வாடை அணிந்த சக்திகள் மற்றும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன்தான் கோயிலுக்கு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டு சித்ரா பெளர்ணமிக்காகவும், கூத்தாநல்லூர் வழிபாடு மன்றத்திலிருந்து, அரிசி, துவரம்பருப்பு மற்றும் எண்ணெய்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கு ரூ.66 ஆயிரம் மதிப்புள்ள, 66 அரிசி மூட்டைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் தொகை ஒரு டின் நெய் உள்ளிட்டவைகளை, தஞ்சை மாவட்ட வட்டத் தலைவர் அய்வேந்திரனிடம், சனிக்கிழமை வழங்கப்பட்டது என்றார்.
மன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் எம்.சாம்பசிவம், பொருளாளர் ஏ.சண்முகம், துணைத் தலைவர் சிவ.வரதராசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஐயப்பா சேவா சங்கத் தலைவர் முத்துக்குருசுவாமி, மெடிக்கல் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.