விவேக் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தன்னுடைய சிறந்த நடிப்புத் திறமையால் மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்த சின்ன கலைவாணர் சகோதரர் விவேக்கின் இழப்பு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது.
தனது மனதில் இருந்த சோகத்தை மறைத்து மற்றவர்களை சிரிக்க வைத்ததுடன், சமுதாயத்திற்காக 1 கோடி மரம் வளர்க்க வேண்டும் என்று கொள்கை கொண்டு வாழ்ந்தவர் சகோதரர் விவேக்.
இந்து சமுதாயத்தில் மறுபிறப்பு உண்டு என்று சொல்வார்கள், விதைக்கப்பட்ட மரம் விதையில் இருந்து முளைத்து எழுந்து வளர்வது போல, சுற்றுச்சூழலை காக்கவும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மீண்டும் அவர் இந்த மண்ணிலேயே பிறப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.