மறைந்த திரைப்பட நடிகர் விவேக்குக்கு, பொன்னேரியில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மரக்கன்றினை நட்டு அஞ்சலி செலுத்தினர்.
திரைப்பட நடிகரும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல ஆர்வலருமான, விவேக் மாரடைப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடலுக்கு, அரசியல் கட்சியினர், திரைப்பட நடிகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், மரக்கன்றுகளை நடுதல், பிளாஸ்டிக் (நெகிழி) பைகளை தவிர்த்தல் உள்ளிட்ட சமூக பணிகளில் ஈடுபட்டு வரும், நேதாஜி சமூக நல இயக்கத்தின் சார்பில், அதன் அமைப்பாளர், ஸ்ரீதர்பாபு தலைமையில், அப்பகுதி இளைஞர்கள் இணைந்து மரக்கன்றினை நட்டு, அவரின் உருவப்படம் முன்பு அஞ்சலி செலுத்தினர்.