கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வன உயிரின சரணாலயத்தில் உள்ள வனச்சரகங்களில் ரோந்து பணிக்கு செல்கின்ற ஜீப் வாகனங்களுக்கு டீசல் அளவு குறைக்கப்பட்டதால் ரோந்து பணிகள் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் வனத்துறை நிர்வாகம் இரண்டாக பிரிக்கப்பட்டது, இதில் ரெகுலர் பாரஸ்ட், மேகமலை வன உயிரின சரணாலயம் என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
மேகமலை வன உயிரின சரணாலய நிர்வாகத்தில், மேகமலை, சின்னமனூர், கம்பம் கிழக்கு, கூடலூர் ஆகிய வனச்சரகங்கள் உள்ளது.
அந்தந்த வனச்சரகங்களில் உள்ள வனத்துறையினர் ரோந்து செல்ல வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கு ரோந்து செல்ல மாதந்தோறும் 110 லிட்டர் டீசல் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஒதுக்கீடு சில மாதங்களுக்கு முன்பு 90 லிட்டராக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஒதுக்கீடு 70 லிட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரோந்து பணியில் செல்ல வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட டீசல் அளவு மேலும் மேலும் குறைக்கப்பட்டுள்ளது வனத்துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி வனத்துறை ஊழியர் ஒருவர் கூறும்போது வனத்துறையில் ரோந்து பணிக்கு பாதுகாப்பு உபகரணங்கள் நவீன படுத்தப்படவில்லை, மேலும் ரோந்து பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்கள் பராமரிப்பு அதிக செலவு ஏற்படுகிறது, இருப்பினும் சரிசெய்து கொள்கிறோம்.
இந்நிலையில், டீசல் அளவு மிகவும் குறைக்கப்பட்டது ரோந்து பணியில் சுணக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது என்றார். ரோந்து பணிகள் தாமதமாக ஈடுபட்டால் வன உயிரின சரணாலய பகுதியில் குற்றச் செயல்களில் அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட வன உயிரின சரணாலயம் நிர்வாகம் டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மேகமலை வன உயிரின சரணாலய உதவி வன பாதுகாவலர் ரவிக்குமாரிடம் கேட்டபோது டீசல் அளவு ஒதுக்கீடு அப்படியேதான் உள்ளது குறைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.