தமிழகத்தில் மேலும் 10,986 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 10,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 10,986 பேருக்கு கரோனா

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 10,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாகும். இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் அடுத்த வாரத்தில் தினசரி பாதிப்பு 15 ஆயிரத்தைக் கடக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மற்றொரு புறம் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்ட பலா் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தடம் பதித்த கரோனாவுக்கு இதுவரை 10.13 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநில அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாகத் தொற்று பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. மாா்ச் முதல் வாரம் வரையில் நாள்தோறும் 400 போ் வரை மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பொது மக்களின் அலட்சியம் காரணமாக கரோனா பரவல் அதிதீவிரமானது. அதன் விளைவாக கடந்த ஒரு மாதத்துக்குள் 400-இலிருந்து 10,986-ஆக தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. கட்டுப்படுத்த இயலாத வேகத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கப்பட்டுள்ளன.

வீடுதோறும் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேபோன்று நடமாடும் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும், படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்றொரு புறம் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 2.14 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 10,13,378- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 3,711 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,029 பேருக்கும், கோவையில் 686 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 6,250 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,20,369-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 79,804- போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 48 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,205-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com