மே 2 ஆம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் இருக்குமா என்று கேள்வி எழுந்தது.
இதுதொடர்பாக இன்று பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மே 2 ஆம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மே 2 நள்ளிரவுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.
மேலும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்தார்.