மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி மகன் மறைவுக்கு அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் யெச்சூரி (35) கொரானா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பாதிப்பு அதிகமானதால் அவருக்கு எக்மோ சிகிச்சையும் வழங்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று (22.04.21) அதிகாலை டெல்லியில் உள்ள மருத்துமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையை தருகிறது. இவரது மறைவு தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சிறந்த பத்திரிகையாளர் என்ற வகையில் அவரது மறைவு பத்திரிகை உலகிற்கும் பேரிழப்பாகும்.
ஆசிஷ் யெச்சூரியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது மறைவால் துயருற்றிருக்கும் தோழர் சீதாராம் யெச்சூரி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவின் சார்பில் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.