புதுச்சேரியில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடுக்கத்தைப் புதுச்சேரி அரசு அறிவித்தது.
இதில் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை 55 மணி நேர முழு பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ளது.
பொது முடக்கம் அமலில் இருந்தாலும் அத்தியாவசிய தேவைகளான மருந்தகம், பால், பெட்ரோல், மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் இயங்குவதற்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்கின. ஆனால் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
அரசுப் பணி உள்பட அத்தியாவசிய பணியில் இருப்போர் அடையாள அட்டை வைத்திருந்தால் அனுமதிக்கப்பட்டனர்.