மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதிக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மூன்று நாள்களுக்கு நீதிமன்ற வளாகம் அடைக்கப்பட்டது.
அவிநாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அவிநாசி கிளை சிறைச்சாலை, கருவூலம், வருவாய்த் துறை அலுவலகங்கள், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தில் நீதிபதியாக பணியாற்றும் 30 வயது பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதிப்பட்டது.
இதைத்தொடர்ந்து வட்டாட்சியர் வளாகத்திற்குள் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளிட்டவை சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு அடைக்கப்பட்டது. மேலும் வட்டாட்சியர் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் வழக்குரைஞர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. நீதிமன்ற வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல அவிநாசி அருகே பழங்கரையில் நீதிபதி குடியிருக்கும் பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.