சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் எட்டாவது நாள் நிகழ்வாக சனிக்கிழமை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாள்களில் ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் சுவாமி சன்னதி முன்புள்ள ஆறுகால் மண்டபத்தில் வெறும் அலங்காரத்துடன் மட்டும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து அதன்பின் கோயிலுக்குள்ளேயே புறப்பாடாகி வந்தனர். திருவிழா நாள்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் நடைபெற்றது இதையொட்டி ஆனந்தவல்லி அம்மனும் பிரியாவிடை சமேதராய் சோமநாதர் சுவாமியும் திருமண அலங்காரத்தில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து திருமணத்திற்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்று முடிந்ததும் சோமநாதர் சுவாமி சார்பில் ஆனந்தவல்லி அம்மனுக்கும் அதன்பின் பிரியாவிடைக்கும் காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
நிகழ்ச்சியைக் காண குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். திருக்கல்யாணம் முடிந்ததும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று சுவாமிக்கு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. அதன்பின்னர் கோயிலுக்கு வெளியே காத்திருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கோயிலுக்குள் நீண்டவரிசையில் நின்று ஆனந்தவல்லி அம்மனையும் சோமநாதர் சுவாமியையும் தரிசனம் செய்தனர்.