கரோனா தொற்று: இரு தலைமைக் காவலா்கள் சாவு

சென்னையில் கரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் இரு தலைமைக் காவலா்கள் உயிரிழந்தனா்.

சென்னையில் கரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் இரு தலைமைக் காவலா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்த விவரம்:

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் எஸ்.மகாராஜன் (38). அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் மகாராஜன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 14-ஆம் தேதி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மகாராஜன், சனிக்கிழமை அதிகாலை இறந்தாா். இறந்த மகாராஜானுக்கு அமுதா என்ற மனைவியும், சுபாஸ்ரீ, நந்தனாஸ்ரீ என்ற இரண்டு மகள்களும் உள்ளனா்.

எஸ்பிசிஐடி காவலா்:

கொடுங்கையூா் எம்கேபி நகா் 5-வது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சீ.முருகேசன் (51). மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் மாநில உளவுத்துறையில் (எஸ்பிசிஐடி) தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா்.

கரோனா தொற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு முருகேசன், கடந்த 15-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். உயா் சிகிச்சைக்காக, கடந்த 19-ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் சனிக்கிழமை இறந்தாா். இறந்த இரு காவலா்கள் குடும்பத்துக்கும் காவல்துறை அதிகாரிகளும்,காவலா்களும் ஆறுதல் கூறினா். ஒரே நாளில் கரோனாவுக்கு சென்னையில் இரு தலைமைக் காவலா்கள் இறந்தது காவல்துறையினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் கடந்த ஒரு வாரத்தில் கரோனாவுக்கு ஒரு காவல் உதவி ஆய்வாளா், 3 தலைமைக் காவலா்கள் என 4 போ் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com