திருநெல்வேலி: கரோனோ தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லாத முழுபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் 2020 மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. 10 கட்டங்களாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு தளர்வுகள் அதிகரிக்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் முதல் முழுமையாக இயல்பு நிலை திரும்பியது.
இந்நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக கரோனா தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 500 யைக் கடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்தது.
அதன்படி இரவு நேர பொதுமுடக்கம் கடந்த வாரம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொலைதூர பேருந்துகள் அனைத்தும் பகல் நேரத்தில் இயக்கப்படுவதுடன், அண்டை மாவட்டங்களுக்கு இரவு 8 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. பால், மருந்துக் கடைகள் மட்டுமே இயங்கின. இதர கடைகள் 100 சதவிகிதம் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம், நகரம் ரத வீதிகள், திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் ஆள்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.
தற்காலிக காய்கனி சந்தைகள், மொத்த காய்கனி சந்தைகளும் திறக்கப்படவில்லை. சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலை, திருநெல்வேலி-தூத்துக்குடி சாலை உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மருந்துகள் வாங்க மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமுடக்கத்தையொட்டி திருநெல்வேலி மாநகர காவல் துணை சீனிவாசன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து வெளியில் சுற்றித்திரிவோர் கண்காணிக்கப்பட்டனர்.