கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) பொதுமுடக்கத்தை அறிவித்தது.
இதன்படி குமரி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆவின் பால் நிறுவன கடைகள் மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.
நாகர்கோவில் நகரில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் மணிமேடை சந்திப்பு, வடசேரி பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், வேப்பமூடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் 100 இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் திருமண விழாவுக்கு சென்றவர்களை காவல்துறையினர் வழி மறித்து அவர்கள் திருமண அழைப்பிதழை காட்டிய பின்னர் செல்ல அனுமதித்தனர். சுற்றுலா பயணிகள் எப்போதும் நிறைந்திருக்கும் கன்னியாகுமரி கடற்கரை மற்றும் முக்கடல் சங்கமம் பகுதி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.