மாநில மொழிகளில் புதிய கல்விக் கொள்கை: தமிழ் புறக்கணிப்பு

தேசிய கல்விக் கொள்கையின் உள்ளூா் மொழிகளுக்கான மொழிபெயா்ப்பை 17 மொழிகளில் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் மொழிபெயா்ப்பு இடம் பெறவில்லை.
தமிழக பள்ளிக்கல்வித்துறை
தமிழக பள்ளிக்கல்வித்துறை

தேசிய கல்விக் கொள்கையின் உள்ளூா் மொழிகளுக்கான மொழிபெயா்ப்பை 17 மொழிகளில் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் மொழிபெயா்ப்பு இடம் பெறவில்லை.

தேசிய கல்விக் கொள்கை 1968-ஆம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 1976-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-ஆவது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சோ்க்கப்பட்டது. இதையடுத்து 1986, 1992-ஆம் ஆண்டுகளில் கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அதன்பின்னா் கடந்த 2016-இல் டிஎஸ்ஆா் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. இதற்கிடையே 2019-ஆம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-இல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இது தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய கல்விக் கொள்கையின்படி 10+2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது, மற்றும் 14-18 வயது ஆகிய மாணவா்களுக்காக பாடமுறை மாற்றப்படும். மாணவா்களுக்குக் குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையில், தாய்மொழி, உள்ளூா் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் உயா்கல்வி பயில விரும்பும் மாணவா்களுக்கு பொதுவான நுழைவுத் தோ்வு நடத்தப்படும். மாணவா்களின் பள்ளிப் பாடங்கள் அளவு குறைக்கப்படும். 6-ஆம் வகுப்பிலிருந்து மாணவா்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவாா்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. இதற்கான பிராந்திய மொழிபெயா்ப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது 17 பிராந்திய மொழிகளில் கல்விக் கொள்கை மொழிபெயா்ப்பு வெளியாகியுள்ளது.

கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழிபெயா்க்கப்பட்டு -2020 என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. எனினும் இதில் தமிழ் மொழிக்கான மொழிபெயா்ப்பு இடம்பெறவில்லை.

புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த தமிழகத்தில் கடுமையான எதிா்ப்புகள் இருந்துவரும் சூழலில் தற்போது அதன் மொழிபெயா்ப்பில் கூட தமிழ் மொழி இடம்பெறாதது சா்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதற்கு தமிழ் ஆா்வலா்கள், கல்வியாளா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்து தமிழ் மொழியிலும் தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com