சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 சேர எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டதால், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணத்தால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சேலம் 4 ரோடு பகுதியில் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி என்ற தனியார் பள்ளியில் இன்று காலை பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவர்கள் பிளஸ் 1-க்கு செல்ல எழுத்துத் தேர்வு நடக்கிறது என மாணவர்களுக்கு வாட்ஸ்ப்பில் தகவல் பள்ளி நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இதனைப் பார்த்து மாணவர்களின் பெற்றோரும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நான்கு ரோடு அருகே உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளிக்கு முன்பாக வந்து திரண்டனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் பிளஸ் 1-ல் சேர தேர்வு வைக்கக் கூடாது .இந்தத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என மாணவர்கள் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுத அமர்ந்தனர். ஆனால் மற்ற மாணவர்கள் பள்ளியின் முன்புறம் நின்று தர்ணா செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மாணவர்களின் பெற்றோர் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்திக்கு தொடர்பு கொண்டு இந்த தேர்வு நடத்தக்கூடாது எனக் கேட்டுக்கொண்டனர். உடனே அவர் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி பிளஸ் 1 தேர்வு நடத்தக்கூடாது என உத்தரவிட்டு பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தார். இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்துத் தேர்வு இல்லை. உடனே வீட்டிற்குச் செல்லுங்கள் என அறிவுரை கூறி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
முன்பு மாணவர்கள் திரண்டதால் அஸ்தம்பட்டி போலீசாரும் குவிக்கப்பட்டனர். மாணவர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் 4 ரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.