சென்னை: பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசன திட்டத்தின் கீழ் வரக்கூடிய விவசாய நிலத்தில் தொழிற்சாலை கட்ட தடை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக மீட்பு இயக்கம் தாக்கல் செய்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் என்ற கிராமத்தில் அரவிந்த கேசவ் என்பவர் தனக்கு சொந்தமான 3.15 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த இடம் பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசன திட்டத்தின் கீழ் வரக்கூடிய விவசாய நிலம் என்பதால் இந்த இடத்தில் தொழிற்சாலை கட்ட தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், விவசாய நிலத்தில் கட்டுமானம் கட்ட அரசு அனுமதியளித்துள்ளது. எனவே, கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி அளித்த அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கட்டுமான பணிகள் கட்ட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுபட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.