சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது பற்றி தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று தீவிரமாக உள்ள நிலையில், தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம், கரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் ஏற்கனவே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுப் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாமா என்பது குறித்து ஆரயப்படுகிறது.
எனவே, விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.