கம்பம்: தேனி மாவட்டம் காமய கவுண்டன்பட்டி மற்றும் அருகிலுள்ள ஊராட்சிகளில் அரசு சித்த மருத்துவமனை சார்பில் இரட்டைக் கசாயம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி,
நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கையாக இரட்டைக் கசாயங்களான நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுரக்கசாயம் வழங்கப்பட்டது.
காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜுதீன் கரோனா விழிப்புணர்வு பற்றி பொதுமக்களிடையே பேசினார்.
காமயகவுண்டன்பட்டியில் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், நாராயணத்தேவன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுத்தாய் செல்லையா, சுருளிப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன், கருநாக்க முத்தன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் மொக்கப்பன் ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர்கள் செய்திருந்தனர்.