கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து அதனை தடுப்பூசி வாங்க சுகாதாரத் துறைக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கரோனா தடுப்பூசி குறித்து வீண் வதந்திகளைப் பரப்பும் பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் விவேக், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.