சென்னை: வரும் மே 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்யும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார் சத்யபிரத சாகு.
அப்போது அவர் பேசுகையில், மே 2-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளோம். தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
கரோனா பரிசோதனையில், தொற்று இல்லை என்று சான்றிதழ் வந்தாலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்குள் நுழையும் போது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். அப்போது 98.6 டிகிரிக்கு மேல் உடல் வெப்பநிலை இருந்தால், அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணியில் 16,387 பேர் ஈடுபட உள்ளனர். தொகுதிகள், அதிகாரிகளின் எண்ணிக்கையைப் பொருத்து வாக்கு எண்ணப்படும் மேஜைகளின் எண்ணிக்கை மாறுபடலாம்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வரும் மே 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, மே 1, 2-ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இவ்வாறு தெரிவித்துள்ளார்.