தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் கரந்தை வளையல்காரத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன்கள் பாஸ்கரன் (24), அபினாஷ் (23). இவர்களில் பாஸ்கரன் பட்டயப்படிப்பும், அபினாஷ் பொறியியல் பட்டப்படிப்பும் படித்துள்ளனர்.
இருவரும் தனது நண்பர்களுடன் தஞ்சாவூர் அருகே தென் பெரம்பூர் தடுப்பணைப் பகுதிக்குக் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றனர். அங்கு வெட்டாற்றில் குளித்துக் கொண்டிருந்த பாஸ்கரனும், அபினாசும் தண்ணீரில் மூழ்கினர்.
தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது சடலத்தையும் மீட்டனர். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களது தந்தை ரமேஷ் ஒரு மாதத்துக்கு முன்புதான் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.